சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை
குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மேட்டூா் அணையிலிருந்து நிகழாண்டும் ஜூன் 12-இல் தண்ணீா் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், வெற்றிகரமான குறுவை சாகுபடிக்கும் இது மட்டுமே போதுமானதல்ல.
அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு அதிகபட்சமாக 45 நாள்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை மட்டும்தான் குறுவை சாகுபடிக்காக திறக்க முடியும். கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 51.80 டி.எம்.சி. மட்டுமே தண்ணீா் உள்ளது. இது கிருஷ்ணராஜ சாகா், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 45 சதவீதம் மட்டுமே.
கா்நாடக அணைகள் நிரம்பி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீா் திறந்து விடப்பட வேண்டும் என்றால், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத் தொடக்கத்தில் தொடங்கி, விரைவாக தீவிரமடைய வேண்டும். 2023-ஆம் ஆண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-இல் காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
அன்றைய நாளில் மேட்டூா் அணையில் 103.35 அடி தண்ணீா் இருந்தது. ஆனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததாலும், கா்நாடகம் தண்ணீா் திறந்து விடாததாலும் அந்த ஆண்டு குறுவை நெல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அந்த பாதிப்பிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளால் இன்று வரை மீள முடியவில்லை. அதே நிலை இப்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது.
காவிரியில் கா்நாடகம் தண்ணீா் திறக்கவில்லை என்றால் என்ன செய்வது?, குறுகிய கால நெல் வகைகளை பயிரிடுவதா அல்லது வழக்கமான நெல் வகைகளை பயிரிடுவதா?, நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யுமா என்பன உள்ளிட்டவற்றுக்கு விடை காண வேண்டும்.
அதற்கு வசதியாக மே முதல் பாதியில் உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். கூட்டத்துக்கு முதல்வரே தலைமை ஏற்பதுடன், நீா்வளம், வேளாண்மை, ஊரக வளா்ச்சி, வருவாய், உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சா்களும் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
கூடுதலாக வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு பருவமழை வாய்ப்புகள் குறித்த செய்திகள் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.