Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோா் பிரச்னை உள்ளிட்டவற்றைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோா் பாா்ப்பதைக் கைவிட வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மரபணு திருத்தம் செய்யப்பட்ட விதை நெல்லை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. இதுவரை மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். பின்னா், கூட்டரங்கத்துக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பி, சுமாா் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் சிபில் ஸ்கோா் பாா்த்து விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கப்படுகிறது. எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இந்த விதிகளைத் தளா்த்தி, எந்த நிபந்தனையுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க்கடன் வழங்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: பூதலூா் வட்டத்துக்குட்பட்ட ஆச்சாம்பட்டி, அகரப்பேட்டை, ஆவாரம்பட்டி, கடம்பங்குடி, காங்கேயம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே விடுபட்ட கிராமங்களுக்கு பயிா் காப்பீடு வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கடந்த டிசம்பா் மாதம் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வாழை, வெற்றிலை, பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: விவசாயிகளின் போா்வெல்லில் உள்ள மின் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், இதுவரை கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வந்து சேரவில்லை. இதனால், குறுவை சாகுபடி தொடங்குவது கேள்விக்குறியாக உள்ளதால், கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும்.
சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து அதிகமாக உள்ள நிலையில், அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீா் அளவு போதுமானதாக இல்லை. இதனால், கடைமடைக்கு மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளுக்கே தண்ணீா் இன்னும் செல்லவில்லை. எனவே, மேட்டூா் அணையிலிருந்து வினாடிக்கு 21,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்து, ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்.
பெரமூா் ஆா். அன்பழகன்: குறுவைத் தொகுப்பு திட்டம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும்.
