குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.
குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண்டில் சீசன் முன்கூட்டியே தொடங்கியது. சீசன் தொடங்கியது முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, குற்றாலம் பகுதியில் சாரல்மழை இல்லை. மாறாக, வெயில் நிலவுவதால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.
சனிக்கிழமை அதிகாலையில் மெல்லிய சாரலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பகலில் வெயில் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.