Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elango...
கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். நடப்பாண்டில் சற்று முன்னதாக மே 27-ஆம் தேதிக்குள் தொடங்கக் கூடும் என்று வானிலை மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. இப்போது மேலும் முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பின்படி கேரளத்தில் பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு மிக முன்கூட்டியே தொடங்கும் பருவமழை இதுவாக இருக்கும். அந்த ஆண்டில் பருவமழை மே 23-ஆம் தேதி தொடங்கியது.
பொதுவாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பருவமழை, ஜூலை 8-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்யும். பின்னா், செப்டம்பா் 17-ஆம் தேதிமுதல் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெற தொடங்கி, அக்டோபா் 15-க்குள் முழுமையாக நிறைவடையும்.
கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை மே 30-ஆம் தேதி தொடங்கியது. முந்தைய ஆண்டுகளில் முறையே ஜூன் 8 (2023), மே 29 (2022), ஜூன் 3 (2021), ஜூன் 1 (2020), ஜூன் 8 (2019), மே 29 (2018) தொடங்கியது.
‘வழக்கத்தைவிட கூடுதல் மழைப்பொழிவு’: நடப்பாண்டு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்; ‘எல் நினோ’ போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டுகால சராசரி மழைப்பொழிவு 87 செ.மீ. ஆகும். இந்த சராசரி அளவில் 90 சதவீதத்தைவிட குறைவான மழைப்பொழிவு ‘பற்றாக்குறையாக’ கருதப்படும். 90-95 சதவீத மழைப்பொழிவு ‘வழக்கத்தைவிட குறைவு’, 96-104 சதவீத மழைப்பொழிவு ‘வழக்கமானது’, 105-110 சதவீதம் ‘வழக்கத்தைவிட அதிகம்’, 110 சதவீதத்துக்கு மேலான மழைப்பொழிவு ‘உபரி’ என்று வகைப்படுத்தப்படுகிறது.
இந்திய மக்கள்தொகையில் 42.3 சதவீதம் பேரின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வேளாண் துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 18.2 சதவீதம் பங்களிக்கிறது. நாட்டின் வேளாண்மைக்கு தென்மேற்குப் பருவமழை மிக முக்கியமானதாகும். நாடு முழுவதும் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும், நீா்மின் உற்பத்திக்கும் இந்தப் பருவமழை இன்றியமையாதது.