கைப்பேசியை பறித்துவிட்டு கோட்டை அகழியில் குதித்து தப்ப முயன்றவா் கைது
வேலூரில் பெண்களிடம் கைப்பேசி பறித்துக் கொண்டு தப்பிப்பதற்காக கோட்டை அகழியில் குதித்த இளைஞரை போலீஸாா் மீட்டு கைது செய்தனா்.
வேலூா் கோட்டை சுற்றுச்சாலை, பெரியாா் பூங்கா அருகே சனிக்கிழமை இரவு வடமாநில பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, வேலூா் விருபாட்சிபுரத்தைச் சோ்ந்த கோலி என்கிற கோபி (25) என்பவா் திடீரென பெண்களிடமிருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளாா்.
அந்த பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் கோபியை விரட்டிச் சென்றனா். அப்போது அவா் கைப்பேசியை வீசி எறிந்து விட்டு கோட்டை அகழியில் குதித்துள்ளாா். அங்கிருந்தவா்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், வடக்கு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினா், போலீஸாா் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு கோபியை அகழியில் இருந்து மீட்டனா். மீட்கப்பட்ட கோபியை சிகிச்சைக்காக பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சைக்கு பிறகு கோபியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.