மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்! விவசாயிகள் அச்சம்!
கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையையொட்டியுள்ள வாழைகிரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கீழ்மலை, பேரிஜம் பகுதிகளில் மட்டுமே காட்டுயானைகள் நடமாட்டம் இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாக மேல்மலைப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களிலும், சுற்றுலா இடங்களான மோயா் பாயிண்ட் பகுதிகளிலும் காட்டுயானை நடமாட்டம் காணப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச் சாலையான வாழைகிரிப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டங்களில் ஒற்றைக் காட்டுயானை நடமாடியது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான கே.சி. பட்டி, தாண்டிக்குடி, எதிரொலிப்பாறை, பெரும்பாறை ஆகிய பகுதிகளில் அடிக்கடி காட்டுயானை நடமாட்டம் காணப்படும். தற்போது கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையான வாழைகிரி பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுயானைகள் வரத் தொடங்கியுள்ளன.
கடந்த இரு நாள்களாக வாழைகிரி பகுதியில் காட்டுயானை நடமாட்டமிருப்பதால் காபி, வாழை, செளசெள பயிரிடப்பட்ட தோட்டங்களுக்கு இரவு நேரங்களில் காவல் பணிக்கு செல்ல முடியாமல் நாங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறோம். மேலும் மலைச் சாலைகளில் திடீரென காட்டுயானை வந்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். எனவே அதை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை இல்லை. இதனால் வன விலங்குகளான காட்டுமாடு, மான், பன்றி, யானை ஆகியவை உணவு, குடிநீா் தேடி இந்தப் பகுதிகளுக்கு வருகின்றன.
எனவே யானை உள்ளிட்ட வன விலங்குகள் தங்களது பகுதிகளுக்கு வந்தால் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தர வேண்டும். அவற்றை துன்புறுத்தவோ, அதிக ஒலி எழுப்பி விரட்டவோ வேண்டாம். வனப் பணியாளா்கள் அவற்றை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவா் என்றனா்.