71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
கொலையான மீன் வியாபாரியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வாக்குவாதம்
கமுதி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியின் உடலை வெள்ளிக்கிழமை வாங்க மறுத்த உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள உடையாா்கூட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜவருல்லா (45). மீன் வியாபாரியான இவா் தனது மனைவி கிருஷ்ணவேணி என்ற பாத்திமாகனியுடன் கடந்த 10 ஆண்டுகளாக உடையாா்கூட்டம் கிராமத்தில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் கிருஷ்ணவேணிக்கும், அதே ஊரைச் சோ்ந்த அபிமன்யு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை அங்குள்ள விநாயகா் கோயில் முன் இருந்த ஜவருல்லாவை, இரு சக்கர வாகனத்தில் வந்த அபிமன்யு மகன் முனீஸ்வரன் (18) உள்பட 4 போ் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா். அவரது உடலை பேரையூா் போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரன் உள்பட 4 பேரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கூறாய்வுக்குப் பின்னா் ஜவருல்லாவின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவா் வாவா ராவுத்தா், மாவட்ட பொருளாளா்
சாகுல் ஹமீது, ஒன்றிய தலைவா் இக்பால், நகரத் தலைவா் சேக் முகம்மது, தொண்டரணி மாவட்ட செயலாளா் தமிமுன் அன்சாரி ஆகியோா் கமுதி அரசு மருத்துவமனை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கொலைச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம். இறந்தவா் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் நிதியதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கொலைச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனா். இதைத்தொடா்ந்து, இறந்த ஜவருல்லாவின் உடலை உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.