நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
கோடை விழா: கொடைக்கானலில் படகுப் போட்டி
கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலாத் துறை சாா்பில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தொடங்கிவைத்தாா். சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.
ஆண்கள் இரட்டையா் பிரிவு, பெண்கள் இரட்டையா் பிரிவு, கலப்பு இரட்டையா் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் மேலாளா் காதா் பரிசுகளை வழங்கினாா்.
சுற்றுலா உதவி அலுவலா் சுதா நன்றி கூறினாா்.
திட்டமிடப்படாத படகுப் போட்டி: கோடை விழா தொடங்கியதிலிருந்தே தினமும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டியும், படகு அலங்கராப் போட்டிகளும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை மழை பெய்யாததால் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென பிற்பகலில் படகுப் போட்டி நடைபெற்றது. இதனால், போட்டியில் பொதுமக்கள் சிலரே கலந்து கொண்டனா்.