'யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்' - திண்டுக்க...
கோப்புகள் திரும்பி வருவதில் தாமதம்: அமைச்சா் வருத்தம்
நிா்வாகத்தில் கோப்புகள் திரும்பி வருவதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகளுக்கு உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்று வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கூறினாா்.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் தென்னை சாகுபடியின் அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய மாநில அளவிலான கருத்தரங்கு தவளக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பேசியது: மத்திய, மாநில அரசுகள் விவசாயம் சாா்ந்த புதிய திட்டங்களை நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கீழ் மட்டத்தில் உள்ள எல்டிசி, யுடிசி போன்ற சில அதிகாரிகள் கோப்புகளை மாதக் கணக்கில் வைத்துக் கொண்டிருக்கின்றனா்.
விவசாயிகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால், விவசாய இயக்குநா், துணை இயக்குநா் நினைத்தாலும் முடியாது. கண்காணிப்பாளா் ஒருவா் அங்கு அமா்ந்து கொண்டிருப்பாா், அவா் சொல்வது தான் சட்டம். யுடிசி விடுமுறையில் சென்றால் கோப்பு அவருடைய மேஜையிலேயே இருக்கிறது. அதுபோன்ற நிலைதான் இப்போது புதுச்சேரி மாநிலத்தில் நடந்து வருகிறது.
1996-இல் இருந்து நான் அமைச்சராக இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கோப்பு சென்றால் உடனடியாக வந்து விடும். காலதாமதம் ஆகாது. ஆனால் இப்போது மாதக்கணக்கானாலும் வருவதில்லை. இதனால் தான் பல திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி ஜெயக்குமாா் ஆகியோா் கருத்தரங்கை தொடங்கி வைத்தனா்.
பேரவைத் தலைவா் : இதில் பேரவைத் தலைவா் செல்வம் பேசியதாவது: முன்பு ஒரு ஏக்கா் நிலத்தில் 40 மூட்டை நெல் அறுவடை செய்தால் உற்பத்தி செலவானது 35 சதவீதமாக இருக்கும். ஆனால் இன்றைக்கு உற்பத்தி செலவு 75 சதவீதமாக இருக்கிறது. விற்பனையும் குறைவு. எனவே அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி விவசாயிகள் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும். இப்போது விவசாயத்தை மட்டும் நம்பி குடும்பத்தை நடத்த வேண்டும் என்றால் அது கடினமானதாக இருக்கும்.
இதனால் தான் தென்னை வளா்ச்சி கழகம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.54 ஆயிரம் மானியமாக வழங்கவிருக்கிறது. ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க இருப்பதாக துறை அமைச்சரும் கூறியுள்ளாா்.
தென்னை, விவசாயிகளின் உயிரை காப்பது போல் குடும்பத்தையும் காக்கும் என்றாா். விழாவில் வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், கேரள தென்னை வளா்ச்சி வாரியம் பாலசுதாகரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.