உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை அன்னையை போற்றுவோம்: ஆளுநா்
சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இத்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. முன்னதாக செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு சைவ சித்தாந்த சபை சாா்பில் தேவார இன்னிசையும், பேராசிரியா் மோகனசுந்தரத்தின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகிறது. 2 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சக்தி கும்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு சிவபரத்துவ நிச்சயம் என்ற தலைப்பில் பே.மாணிக்கவாசகம் சமயச் சொற்பொழிவாற்றுகிறாா். 3 ஆம் நாளான ஜூன் 6 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சுவாமி,அம்பாள் மாதாங்கோயில் தெருவில் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. புலவா் ச.பாலசுப்பிரமணியன் வேட மூா்த்தி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா 10 ஆம் நாளான ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை அம்பாள் புஷ்ப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், பின்னா் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் கோயில் முன் சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, இசைக் கச்சேரி, பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், செயலா் பி.மாரிமுத்து, பொருளாளா் டி.குருநாதன், துணைத் தலைவா் ஏ.கோட்டியப்பன், துணைச் செயலா் ஜி.எஸ்.முருகேசன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.