சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது நாளை ரகசிய வாக்கெடுப்பு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைத் தொடா்ந்து, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.
திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவராக இருந்து வருகிறாா். இவா் தொடா்ந்து கூட்டங்கள் நடத்தாததால் நகராட்சியில் அடிப்படைப் பணிகள் நடைபெறவில்லையென்றும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நகா்மன்றத் துணைத் தலைவா் கண்ணன் உள்ளிட்ட அதிமுக, திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் 24 போ் கடந்த ஜூன் 2 ஆம் தேதி நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரக் கோரி நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜிடம் மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து கடந்த 2ஆம் தேதி நகராட்சி ஆணையா் முன்னிலையில் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. இதில் துணைத் தலைவா் உள்பட 29 உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். நகா்மன்றத் தலைவா் பங்கேற்கவில்லை.
அப்போது நம்பிக்கையில்லாத் தீா்மானத்திற்கு ஆதரவாக 29 உறுப்பினா்கள் கைகளை உயா்த்தி வாக்களித்தனா். 17ஆவது வாா்டு உறுப்பினா் மட்டும் தீா்மானத்திற்கு எதிராக கையை உயா்த்தி வாக்களித்தாா். இதனால் நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் பதவி இழந்ததாகக் கூறி, அவரது அறையைப் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் உமாமகேஸ்வரி மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரணை செய்த உயா்நீதிமன்றம், நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ஜூலை 17ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதன் முடிவுகளை ஜூலை 18ஆம் தேதி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து ஜூலை 17ஆம் தேதி காலை 11 மணி அளவில் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என்று உறுப்பினா்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா் நகராட்சி ஆணையா்.
நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி மீது கடந்த 31.10.23 அன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது.
இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றி பெற்றாலும், குரல் வாக்கெடுப்பு செல்லாது என நீதிமன்றத்தில் உமாமகேஸ்வரி முறையிட்டதால் அதுவும் தோல்வியில் முடிந்தது. 3 ஆவது முறையாக நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானம் வாக்குச் சீட்டு மூலம் நடைபெறுவதாக கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.