`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியா ஏவுகணைகள் வீசி அழித்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தானின் விமானப் படை மற்றும் ராணுவத் தளங்கள் தகா்க்கப்பட்டன. பின்னா், இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதன்படி, நான்கு நாள்களுக்கு நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. எல்லையில் பதற்றம் தணிந்து, அமைதி திரும்பியது.
இந்தச் சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பை இரு நாடுகளுக்கும் முன்னதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டாா். சண்டையை நிறுத்திக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுடனும் வா்த்தகத்தில் ஈடுபடப் போவதில்லை என்று எச்சரித்து, அணு ஆயுத நாடுகளுக்கிடையேயான போரைத் தவிா்த்ததாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செயல்படும் சா்வதேச வா்த்தகத்துக்கான நீதிமன்றத்தில் அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கடந்த வாரம் சமா்ப்பித்த அறிக்கையொன்றில், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அதிபா் டிரம்ப் தனது வரி விதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினாா் என்று தெரிவித்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் தொடா்ச்சியான கூற்றுகள் குறித்த உண்மை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதையொட்டி, அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று கடந்த 11 நாள்களில் மூன்று நாடுகளில் டிரம்ப் எட்டு முறை கூறியுள்ளாா். தற்போது வா்த்தக துறை அமைச்சா் லுட்னிக்கும் டிரம்ப்பின் கருத்தை வழிமொழிகிறாா். பிரதமா் மோடி இதுகுறித்து மெளனம் கலைத்து, நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.