மாா்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலகங்கள் செயல்படும்
சனிப்பெயர்ச்சி 2025 தனுசு : `நிதானம்... கவனம்... சாதகம்' - என்னென்ன காத்திருக்கிறது?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். சில விஷயங்களிலும் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எனினும் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
தனுசு ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால், சின்னச் சின்ன வேலைகளைக்கூட அலைந்து முடிக்கவேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது, தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வீர்கள். எனினும், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.
2. குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். மேலும், குடும்ப சொத்துப் பிரச்னைகளில் கவனமாக இருக்கவேண்டும். இந்தக் காலகட்டத்தில் சொத்துப் பத்திரம் - உயில் எழுதுவது, சொத்தை விற்பது போன்றவை வேண்டாம்.
3. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்த பொருள்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வேண்டாம். மற்றபடி பணவரவு திருப்தியாகவே அமையும்.
4. அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும் காலம் என்றாலும், திருமணத்துக்குக் காத்திருக்கும் இளையோருக்கு, குருபகவான் அருளால் திருமணம் நடைபெறும். எனினும், சம்பந்திகளிடையே பிரச்னைகள் வரலாம். உறவுகளிடையேயும் மோதலும் பிரச்னையும் உருவாகும். எனவே, அவர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

5. தாய்வழிச் சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதிபெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். எனினும் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல் நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
6. பள்ளி மாணவ, மாணவியர் செய்யாத தவறுக்கு தண்டனை பெற வேண்டி வரலாம். நட்பில் கவனமாக இருங்கள். எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்துமுடிக்கப் பாருங்கள்.
7. வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் உருவாகும். தியானம், யோகா என மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும். எனினும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில், உறவுகள் மத்தியில் உங்களுக்கான பொறுப்பும் முக்கியத்துவமும் அதிகரிக்கும்.
8. சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கலைகளிலும் வழிபாடுகளிலும் மனதைச் செலுத்துங்கள்.
9. சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
10. சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதுப் பொறுப்புகளும் உங்களை நம்பித்தரப்படும். மற்றபடி வியாபாரம் - தொழில் விருத்தியாகும். உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் வரும். விவாதங்கள், சண்டைகள் வேண்டாம்.
11. இந்த ராசியைச் சேர்ந்த மூலம் நட்சத்திரக்காரர்கள் அதிக கோபப்படுவார்கள். வீண் பிரச்னைகள், மன உளைச்சல்கள் வந்துசேரும். எங்கேயும் எவருக்காகவும் வாக்குறுதி கொடுக்கவேண்டாம்.

12. பூராடம் நட்சத்திரக்காரர்கள் உடல் நலனில் கவனம் கொள்ளவேண்டும். வெளி உணவுகளைத் தவிருங்கள். வேண்டாத பழக்கவழக்கங்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.
13. உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், பணியில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். எந்த வேலையிலும் ஒன்றுக்கு இருமுறை யோசித்துவிட்டுச் செய்யவும்; ஆராய்ந்து முடிவெடுக்கவும்.
14. வியாபாரிகளே, கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். பற்று-வரவில் எதிர்பார்த்த பலன் உண்டு என்றாலும், அதற்காக அதீத உழைப்பு தேவைப்படும். புது ஒப்பந்தங்கள் தேடிவரும் என்பதால், அவற்றைத் தக்கவைக்க அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.
15. உத்தியோகஸ்தர்களே, வேலையில் அதீத கவனம் தேவை. சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களைக் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். உயர் பதவி கிடைக்கும்; இடமாறுதல் கிடைக்கும்.