Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ...
சனிப்பெயர்ச்சி 2025 கன்னி: பயம் தேவையில்லை; ஆனால், கவனம்... - எப்படியிருக்கும் பெயர்ச்சி?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, கண்டகச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்தக் காலத்தில் வழக்குகள் சாதகமாகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும். எனினும், எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.
கன்னி ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான், வரும் மார்ச்-29 முதல், ஏழாம் இடத்துக்குச் செல்கிறார். 6-ல் இருந்த சனியால் ஆரோக்கியக் குறைவு, விபத்து போன்றவை நடந்திருக்கலாம். இப்போது அந்த நிலைமாறும்.
2. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மருத்துவச்செலவுகள் ஏற்படலாம். சகோதர சகோதரிகளால் ஏற்படும் கடன் பிரச்னைகள், உங்களுக்குத் தலைவலியைத் தரலாம்.
3. கண்டகச் சனி உறவுச் சிக்கல்களை உருவாக்கும். கவனம் தேவை. பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வர். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரியவேண்டி வரும்.
4. சனி தனவிருத்தியைக் கொடுப்பார். எனினும் வீண் ஆடம்பரம்கூடாது. பொருளாதாரத்தில் எச்சரிக்கை வேண்டும். விலையுயர்ந்த பொருள்கள், நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றில் அதீத கவனம் தேவை.

5. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரபலங்கள், வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். அரசாங்க வரிகள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்தக் காரியமும் செய்யவேண்டாம்.
6. இல்லத்தரசிகளே! உங்கள் உடல்நலனிலும் கணவரின் ஆரோக்கியத்திலும் சற்றுக் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், சக ஊழியர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும்.
7. சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், அலர்ஜி பிரச்னைகள் வரக்கூடும். தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. நேரம் தவறி சாப்பிட வேண்டாம்.
8. சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அண்டை வீட்டாரிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம்.
9. சனி பகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்பு கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரையிலும் வீண் விரயம், கேளிக்கைச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
10. இந்த ராசியைச் சேர்ந்த உத்திரம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் தந்தையார் உடல்நலனில் அக்கறை செலுத்தவேண்டும். வீட்டிலும் வெளியிலும் வேளைப்பழுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.
11. அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு மே மாதத்துக்குப் பிறகு மனநிம்மதியான வாழ்க்கை அமையும். வெளியிடங்களில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்.

12. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்குச் சகோதர - சகோதரி வகையிலும் சொத்து தொடர்பாகவும் பிரச்னைகள் ஏற்படலாம்.
13. வியாபாரம் மற்றும் தொழிலில் அதீத அக்கறை தேவைப்படும். எதிலும் அலட்சியம் கூடாது. முக்கியமான விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கடன் விஷயத்தில் கவனம்தேவை. புதிய முதலீடுகள், பண விஷயத்தில் பலமுறை யோசித்து செயல்படவும்.
14. பணியிடத்தில் கோபமும் வேகமும் கூடாது. நிதானத்துடன் நடப்பது மிகவும் அவசியம். வீண் விமர்சனங்களைத் தவிர்த்துவிடுங்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்கவேண்டாம். சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். திடீர் இடமாற்றம் உண்டு.
15. கன்னி ராசிக்காரர்கள், பயப்படும் அளவுக்கு இந்த சனிப் பெயர்ச்சி அமையவில்லை என்றாலும் எதிலும் எச்சரிக்கை அவசியம். ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும் இந்த வருட மத்திக்குப் பிறகு, தெளிவும் அமைதியும் பெருகும்.