சனிப்பெயர்ச்சி 2025 மகரம் : `தொட்டதெல்லாம் துலங்கும்' - கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்கள் எவை?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மகர ராசிக்கு 3-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். இனி, வரும் காலம் உங்களுக்குப் பொற்காலம் எனலாம். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. ஏழரைச் சனி விலகும் காலம் இது. மருந்து, மாத்திரை என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்கியம் அடைவீர்கள். வழக்கில் இனி வெற்றிதான். கடன் பிரச்னைகளில் எல்லாம் நல்லதொரு தீர்வு தேடி வரும். குடும்ப விசேஷங்களில் உங்களுக்கான முக்கியத்துவம் கூடும்.
2. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சிலருக்கு அழகிய வாரிசு உருவாகும். திருமணத்துக்குக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். பலருக்கும் சொந்த வீடு கனவு நனவாகும் காலம் இது. சிலர், கடன் பட்டாவது சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள்.
3. பேச்சில் கவனமாக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைகுனிந்த நிலை மாறும். நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் ஏதேதோ வகையில் தடை, தடங்கள் வந்தன அல்லவா? அந்த நிலை மாறும். இனி தொட்டதெல்லாம் துலங்கும்.
4. பெண்கள் உடல் நலத்தில் மேன்மை அடைவர். மூட்டுவலி, இடுப்பு வலி போன்றவை தகுந்த சிகிச்சையால் குணமாகும். அதேபோல், பிறந்தவீட்டு உறவுப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வம்பு வழக்குகள் தீரும்.

5. சிலருக்கு நல்ல வேலை, பதவி, நல்ல சம்பளம் கிடைக்கும். மனதுக்குப் பிடித்த இடமாற்றம் கிடைக்கும். இதே வருடம் ராகு-கேது பெயர்ச்சியும் உண்டு. 2 மற்றும் 8-ல் வரக்கூடிய ராகு-கேது புதிய பரிமாணங்களைக் கொடுப்பார்கள். வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். பணவரவு உண்டு. பங்குச் சந்தையில் கவனம் தேவை.
6. பெண்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இணையத்தில் புதிய தொழில் தொடங்கலாம். தொட்டதெல்லாம் துலங்கும் நேரம் என்பதால், பெண்கள் அமோகமாக வளர்ச்சி பெறுவார்கள்.
7. எனினும், இந்த ராசிக்காரர்கள், புதிய கடன் விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம். நிறைய பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உடல் நலம் மேம்படும். மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்குவர்.
8. சனிபகவானின் பார்வை பலன்கள் என்னவென்றால், அவர் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.
9. சனி பகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.
10. சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால், சில விஷயங்களில் பொருள் விரயம் ஏற்படலாம். எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி பெற கொஞ்சம் சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். அதீத வேலையாலும், புது வாய்ப்புகளாலும் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும்.
11. இந்த ராசியைச் சேர்ந்த உத்திராடம் நட்சத்திர அன்பர்கள் வேலையில், அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். பேச்சில் செயலில் கவனம் தேவை. அரசியலில் இருப்பவர்கள், விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகள்கூட பெரும் சர்ச்சையை உருவாக்கிவிடலாம்.

12. திருவோண நட்சத்திரக்காரர்கள் மகிழக்கூடிய வேளையிது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் அமோக காலம் இது. நம்பிக்கைக்கு உகந்த நண்பர்கள், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களை எதிர்த்தவர்களும், உங்களின் நல்ல எண்ணத்தைப் புரிந்துகொள்வார்கள்.
13. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டும். புதிய தொழில், புது முயற்சிகள் போன்றவற்றில், அனுபவசாலிகளின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுங்கள்.
14. வியாபாரிகளே, கடையை நவீன மயமாக்குவீர்கள். அனுபமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் உருவாகும். சொத்து சேரும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள், இப்போது கிடைக்கும்.
15. உத்தியோகஸ்தர்களே, பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். எனினும் எதன் பொருட்டும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள்.