சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது.
கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை சரிவுடன் முடிந்த நிலையில், இன்றைய தொடக்கமும் சரிவுடன் காணப்பட்டது.
காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 121 புள்ளிகள் சரிந்து 77,199.42 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.35 புள்ளிகள் சரிந்து 23,346.25 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வணிகத்தில் 0.19 சதவீதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் வணிகமாகி வருகிறது. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
சிறு - குறு நிறுவனங்கள் அதிகபட்சமாக 1% வரை சரிந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிம்ரப்பின் வரி விதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகள் நிலையற்ற தன்மையில் நீடித்து வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மையால் நிதி வெளியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்றைய வணிக நேர முடிவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 2,464 கோடி நிகர விற்பனையை பதிவு செய்தனர். உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 1515 கோடி நிகர விற்பனையை பதிவு செய்தனர்.
இதன் விளைவாக தங்கம் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளதால், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.