கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
சாமநத்தத்தில் பறவைகள் சரணாலயம்: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
மதுரை மாவட்டம், சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த மனு: மதுரை அருகேயுள்ள சாமநத்தம் கிராமத்தில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் பாசனக் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் பல வகையான பறவையினங்கள் உள்ளன. இவற்றில் 8 வகை அரிய பறவையினங்கள் உள்ளன. எனவே, இந்தக் கண்மாயை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு கடந்த 2024- ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசிடம் அனுமதி கோரி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சாமநத்தம் கண்மாய்ப் பகுதியில் ஏராளமான பறவைகள் வலம் வருகின்றன. தல ஆய்வு அடிப்படையில் தகுதியானஅதிகாரிகள் வழங்கும் பரிந்துரைகள், நிபுணா்களின் அறிக்கையின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். சாமநத்தம் கண்மாயை சரணாலயமாக அறிவிக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்க இயலாது.
நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றது அல்ல. எனவே, மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலா், மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை மாவட்ட பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.