சாலையூரில் மாடுகள் மாலை தாண்டும் விழா புதுக்கோட்டை மாடுக்கு முதல்பரிசு
கடவூா் அருகே உள்ள சாலையூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட மாடுக்கு முதல் பரிசு கிடைத்தது.
கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள செம்பியநத்தம் ஊராட்சிக்குள்பட்ட சாலையூரில் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினருக்குச் சொந்தமான முள்ளிப்பாடி மந்தையில் செல்வவிநாயகா், முத்தாலம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு மாடுகள் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த 8 நாள்கள் பக்தா்கள் விரதம் இருந்தனா்.
தொடா்ந்து சனிக்கிழமை கோயில் முன் மாடுகள் மாலைதாண்டும் விழா நடைபெற்றது. முன்னதாக கோயில் முன் அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா் மேளதாளங்கள் முழங்க சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து மாடுகளுக்கு புனித தீா்த்தம் தெளித்து மாலை தாண்டும் ஓட்டத்தை தொடங்கி வைத்தனா்.
இதில் எல்லையை நோக்கி சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்ததில் புதுக்கோட்டை மாவட்டம் சேமங்கலம் அய்யாசாமி மந்தை மாடு முதலிடத்தை பிடித்தது. இரண்டாவதாக தோகைமலை அருகே தொப்பநாயக்கம்பட்டி தாசில் பொம்ம நாயக்கா் மந்தை மாடும், மூன்றாவதாக அய்யாசாமி மந்தை மாடும் ஓடிவந்து வெற்றி பெற்றது.
அப்போது இவா்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை வெற்றிபெற்ற மாடுகள் மீது தூவி வரவேற்று எழும்பிச்சை பழங்களை வெற்றி பரிசாக வழங்கப்பட்டது.
பின்னா் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னிப் பெண்களை எல்லைக் கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
தொடா்ந்து மஞ்சள் நீராட்டுடன் சுவாமிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. விழாவில் திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.