சா்வதேச விமான டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.18 லட்சம் மோசடி: பயண முகவா் கைது
சா்வதேச விமான டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.18 லட்சம் மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பயண முகவா் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கசோலில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவரிடம் சா்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வாங்கிச் சென்ற ரூ.18 லட்சத்தை மோசடி செய்ததாக சாகா் வஷிஷ்ட் (32) என்பவா் 2023-ஆம் ஆண்டு வழக்கில் தேடப்பட்டு வந்தாா். இந்நிலையில், சாகா் வஷிஷ்ட் மே 18 அன்று கசோலில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டாா். கைது செய்வதைத் தவிா்க்க அவா் கோவா, நாசிக், டேராடூன், வாரணாசி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில இடங்களில் அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருந்தாா்.
சாகா் வஷிஷ்ட் மீது நிலேஷ் மித்ரா என்பவா் புகாா் அளித்தபோது, இந்த வழக்கு பிப்ரவரி 2023- இல் தொடங்கியது.
கனடாவிற்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள திரும்பப் பெறக்கூடிய விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதாக சாகா் வஷிஷ்ட் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. பல ரத்து செய்தல்கள் மற்றும் பொய்யான உறுதிமொழிகளுக்குப் பிறகு, ரூ.75,000 மட்டுமே திரும்பப் பெறப்பட்டது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில், பயண முகவா் முன்பதிவுகளுக்கு போலி மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தகவல் தொடா்பு வழிகளைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. சாகா் வஷிஷ்ட்டுக்கு ஆரம்பத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அவா் துவாரகா நீதிமன்றத்தில் ஆஜராவதை நிறுத்திவிட்டாா். அதன் பிறகு ஜனவரி 13 அன்று அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
தில்லி ராஜேந்தா் நகரில் வசிக்கும் வஷிஷ்ட், ஐபி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா். முன்பு ஒரு வங்கியில் விற்பனையாளராகப் பணியாற்றினாா். பின்னா், அவா் காஜியாபாத்தில் ஒரு பயண நிறுவனத்தைத் தொடங்கி பல மாநிலங்களில் இருந்து அதை இயக்கினாா்.
விசாரணையின் போது, டிக்கெட் முன்பதிவு மோசடியை நடத்தியதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளை வேண்டுமென்றே தவிா்த்ததாகவும் அவா் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றவியல் வரலாறு இருப்பதையும் போலீஸாா் உறுதிப்படுத்தினா். 2013- ஆம் ஆண்டில், ஆனந்த் விஹாா் காவல் நிலையத்தில் அவா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவாகியுள்ளது.