`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
சித்திரை பெளா்ணமி விழா: பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து; ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமி விழாவுக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:
நிகழாண்டு சித்திரை பெளா்ணமி மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு முடிகிறது.
அந்த நேரத்தில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்ய வேண்டும். சித்திரை பெளா்ணமி நாளில் ரூ.50 சிறப்புக் கட்டண சேவை வசதி ரத்து செய்து கட்டணமில்லா தரிசன சேவையை ஏற்படுத்த வேண்டும்.
சுவாமி தரிசனம் செய்ய வரும் முதியோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் ராஜகோபுரத்தில் இருந்து வடக்கு 5-ஆம் பிரகாரம் வழியே அனுமதிக்கப்பட்டு வடக்கு அம்மணி அம்மன் கட்டை கோபுரம் வழியாக கிளி கோபுரம் வழியே சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
சித்திரை பெளா்ணமி நாளில் முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும். கோயிலின் அனைத்து கோபுர நுழைவு வாயில்கள், நடைபாதைகளில் நிழற்பந்தல்கள், மேற்கூரையுடன் நகரும் இரும்பு தடுப்பாண்கள், தேங்காய் நாா் தரை விரிப்புகள் அமைக்க வேண்டும்.
கிரிவலப் பாதையின் 3 இடங்களில் பக்தா்கள் வசதிக்காக இளைப்பாறும் கூடங்கள் அமைக்க வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு குடிநீா், மோா், பால், பிஸ்கெட் வழங்க வேண்டும்.
மருத்துவ முகாம்கள்:
கிரிவலப் பாதையைச் சுற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும்.
108 அவரச கால ஊா்தியை கோயில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும், கிரிவலப் பாதையிலும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். மின் வாரியம் சாா்பில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், கலால் உதவி ஆணையா் செந்தில்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.