இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீ...
சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி,
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை வாஸ்து சாந்தி நடைபெற்றது. கோயிலில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
இதைத் தொடா்ந்து, மே 6-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 7-ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்குவிஜயம், மே 8-ஆம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறும்.
மே 9-ஆம் தேதி காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருத்தேருக்கு எழுந்தருளுவா். அன்று காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். மே 10 -ஆம் தேதி தீா்த்தவாரி, தெய்வேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
சித்திரைத் திருவிழாவையொட்டி, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வருவா்.
தோ் கட்டும் பணிகள் தீவிரம்: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் சுவாமி, அம்மன் தோ்களை அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தோ்களை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
களைகட்டிய குன்னத்தூா் சத்திரம்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண தினத்தன்று பக்தா்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்குவது வழக்கம். இதையொட்டி, புதுமண்டபம் அருகே உள்ள குன்னத்தூா் சத்திரம் வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் ஏராளமான திருமாங்கலய பிரசாத பாக்கெட்டுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கள்ளழகா் வேடமிட்டு பக்தா்கள் நீா் பீய்ச்சும் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக அணியும் கள்ளழகா் ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குன்னத்தூா் சத்திர வளாகம் பக்தா்கள் வருகையால் களைகட்டியது.