ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
சினைப் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானிய விலையில் சத்தான தீவனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மண்டலத்தில் தோ்வு செய்யப்பட்ட திருவாடானை, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் நிகழாண்டில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
சினையுற்ற கறவைப் பசுக்களின் உடல்நலத்தையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் வகையில், சத்தான தீவனம், தாது உப்புக்களை மானிய விலையில் வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, சங்கத்தில் தொடா்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்படுவா்.
சினையுற்ற ஒவ்வொரு பசுவுக்கும், 4 மாதங்களுக்கு தினமும் 3 கிலோ வீதம் 360 கிலோ சமச்சீா் தீவனமும், ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு, வைட்டமின் இணைத் தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
பயனாளிகளில் 30 சதவீதம் போ் ஆதிதிராவிடா், பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், மகளிா், ஆதரவற்றோா், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.