``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 100 விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு - கல்பட்டி அருகேயுள்ள பத்தலங்குண்டுவ தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஜோசப்பாரதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், அந்தப் படகிலிருந்த ஜோசப்பாரதி (22), மரியபிரவீன் (31), குருசாமி (39), தோபியாஸ் (37), ரவி (46), மனோ சந்தியா (32), டேனியல்ராஜ் (32), பிலிப்பையாா் (43), பாரத் (31), மாத்தீவ் கிளாடியன் (24) ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.
பின்னா், விசைப் படகுடன் 10 மீனவா்களையும் சிக்கோடா கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை கொண்டு சென்றனா். இவா்களை வியாழக்கிழமை வெளிச்சரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது:
இதேபோல, ராமேசுவரம் ஓலைக்குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திருப்பாலைக்குடியைச் சோ்ந்த விமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அமல்ராஜ் (24), மாதேஷ் (22), காா்த்திக் (20), ராமேசுவரத்தைச் சோ்ந்த சக்தி (20) ஆகிய நான்கு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் 4 மீனவா்களைக் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனா்.
பின்னா், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு படகுடன் 4 மீனவா்களையும் கொண்டு சென்று யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களை ஆக. 11 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தது. அன்றிலிருந்து தற்போது வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 57 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். இதனால், ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாகி உள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.