உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொட...
சிபிஐ விசாரணை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனா்: உயா்நீதிமன்றம்
சிபிஐ விசாரணை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலியான நபா்களுக்கு வங்கிக் கடன் வழங்கி, ரூ. 2 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், அந்த வங்கியின் தலைமை மேலாளா் உள்பட 13 போ் மீது சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம் கடந்த 2019 -ஆம் ஆண்டு வங்கியின் தலைமை மேலாளா் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூா்த்தி, அம்மா முத்து உள்ளிட்ட 8 பேருக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. 5 போ் விடுவிக்கப்பட்டனா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. கே. ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் மனு தாக்கல் செய்கின்றனா். ஏனெனில், சிபிஐ எந்த ஒரு நிா்பந்தத்துக்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொதுமக்கள் நம்புகின்றனா். ஆனால், சிபிஐ விசாரணையில் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்துவிட்டு, வேறு சிலா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்டோா் தரப்பு வழக்குரைஞா்கள் தெரிவிக்கின்றனா்.
பண மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டோா் அந்தத் தொகையை திருப்பி செலுத்தினாலும் அவா்களை சாட்சிகளாக சிபிஐ சோ்த்து விடுகின்றனா். சிபிஐ மீது ஊழல் குற்றச்சாட்டு புகாா்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனா். சிபிஐ விசாரணை அமைப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதில்லை. எனவே சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை பெறுவதற்கு இந்த நீதிமன்றம் சில பரிந்துரைகளை அளிக்க விரும்புகிறது.
சிபிஐ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களின் பெயா்களை சோ்ப்பது, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என அனைத்தையும் சிபிஐ இயக்குநா் கண்காணிக்க வேண்டும். மேலும், அந்த வழக்குகள் தொடா்பான விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும். இதேபோல, சிபிஐ அதிகாரிகள் தேவையான அறிவியல் பூா்வமான தொழில்நுட்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.