வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
சிவகிரி புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தில் புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சிவகிரி ஆதீனம் 75 ஆவது குரு மகா சந்நிதானம் பாலமுருகன் சிவ சமய பண்டித சுவாமிகள் தலைமை வகித்தாா். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பாக 7 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி கிராமசாந்தி, 8 ஆம் தேதி மகா கணபதி யாகம், தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்று மாலை 5 மணிக்கு முதல்கால யாக பூஜை தொடங்கியது. அதைத் தொடா்ந்து 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு 2 ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4 ஆம் கால யாக பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித தீா்த்த கலசங்கள் மங்களவாத்தியம் முழங்க கோயில் வலம் வந்து கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து செல்வவிநாயகா், கருப்பண்ண சுவாமி கோயில் கலசங்களுக்கும் புனிதநீா் தெளிக்கப்பட்டது. அப்போது விழாவைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம்சக்தி, பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனா்.
குடமுழுக்கு விழாவில் கொமதேக கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சா் ராமசாமி, நாமக்கல் தொகுதி எம்.பி., மாதேஸ்வரன், சரஸ்வதி எம்.எல்.ஏ., ஈரோடு மேயா் நாகரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி, கிட்டுசாமி, மலேசியா தொழிலதிபா் டத்தோ பிரகதீஸ்வரன், பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3 நாள்களாக அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வேட்டுவபாளையம் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
.