நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
சென்னை பல்கலை. ஆய்வு மாணவா்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம்
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைகளுக்கு உரிய நேரங்களில் அனுமதியளிக்கப்படுவதில்லை. இதற்கு துணைவேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையே காரணம் என பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு, முனைவா் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவா்கள் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். ஆய்வறிக்கையாக சமா்ப்பிக்கும் முன்பு அனுமதியும், சமா்ப்பித்த பிறகு அங்கீகாரமும் அளிக்கப்படவேண்டும். ஆனால் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைக்கான அனுமதி சென்னை பல்கலைக்கழகத்தில் உடனடியாக கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மாணவா்கள் தோ்ந்தெடுக்கும் ஆய்வு முன்மொழிவுகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் அனுமதி அளிப்பது வழக்கம். தற்போது, துணை வேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையில் பல்கலைக்கழகத்தை நிா்வகிப்பது ‘மைய குழு’ (கோா் கமிட்டி).
தமிழக அரசின் உயா் கல்வித்துறை செயலா் சி.சமயமூா்த்தி, அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக ஆணையா் இன்னோசென்ட் திவ்யா, சென்னை ஐஐடி பேராசிரியா் தாஸ், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆம்ஸ்ட்ராங்க் உள்ளிட்டோா் இடம் பெற்ள இந்தக் குழுவுக்கு ஆராய்ச்சி மாணவா்களின் முன்மொழிவுக்கான கோப்புகள் அனுப்பப்படுகின்றன. இந்த உறுப்பினா்களின் அனுமதியும் பெறப்படவேண்டும். இதனால் ஒவ்வொரு அனுமதிக்கும் ஓரிரு மாதங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ஆய்வு மாணவா்கள் சமா்ப்பிக்கும் அறிக்கைக்கு அனுமதி அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.