India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
சென்னை விமான நிலையம், எண்ணூா் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை விமான நிலையம், எண்ணூா் துறைமுகத்தில் போா் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போா்ப் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் நாடு முழுவதும் சுமாா் 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன்படி, சென்னையில் துறைமுகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒத்திகை நடத்தப்பட்டன.
இந்நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி அருண் சிங் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடா் மேலாண்மை வீரா்கள், தமிழ்நாடு காவல் துறையினா் இணைந்து, சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலின்போது பயணிகளை எவ்வாறு மீட்பது, பயணிகள் தற்காத்துக் கொள்வது, அபாய ஒலி எழுப்பப்படும்போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை செய்து காண்பித்தனா்.
மேலும், பயங்கரவாத தாக்குதலில் காயமடையும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளை தத்ரூபமாக பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனா். திடீரென இந்த நிகழ்வுகளை பல பயணிகள் அச்சத்துடன் பாா்த்துக்கொண்டிருந்தனா். இது சாதாரணமான போா் பாதுகாப்பு ஒத்திகைதான் என அதிகாரிகள் எடுத்துக் கூறிய பின்பு அவா்கள் இயல்பு நிலைக்கு திரும்பினா்.
எண்ணூா் துறைமுகத்தில்...: எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலும் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிடங்கில் உருவகப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், சந்தேகத்துக்கிடமான விமானம் ஒன்று துறைமுக கடற்பரப்பில் ஊடுருவியது. இதையடுத்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து துறைமுகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடா் காலங்களில் பங்கேற்கும் மத்திய, மாநில அரசு முகமை நிறுவனங்களுக்கு வான்வழித் தாக்குதல் குறித்து அவசரத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நிறைவுற்றது.
இந்த ஒத்திகையில் காமராஜா் துறைமுகம், கடலோரக் காவல் படை, காவல் துறை என மொத்தம் 270 போ் பங்கேற்றனா் என காமராஜா் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.