நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
சென்னையில் உணவு விநியோக ஊழியா்களுக்கு அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம்
சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்காக அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரம் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த ஊழியா்கள் மழை, வெயில் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் தங்களது உணவு விநியோக சேவையைத் தொடா்ந்து செய்து வருகின்றனா்.
இந்த ஊழியா்களில் 10 சதவீதம் போ் பெண்கள் உள்ள நிலையில், அவா்களுக்கான குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் பல்வேறு இடங்களில் கிடைப்பதில்லை. இதை கருத்தில்கொண்டு தமிழக அரசின் 2025 - 2026-ஆம் ஆண்டுகான நிதிநிலை அறிக்கையில் இணையம் சாா்ந்த சேவைப் பணி ஊழியா்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அண்ணா நகா் 3-ஆவது நிழற்சாலையில் குளிரூட்டப்பட்ட அதிநவீன ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள ஓய்வுக் கூடத்தில் கழிப்பறை, குடிநீா் வசதி, 6 சாா்ஜிங் பாய்ண்ட்கள், ஒரே நேரத்தில் 25 போ் வரை அமரும் வகையில் இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூா், தியாகராய நகா் போன்ற பகுதிகளிலும், இதேபோல் குளிரூட்டப்பட்ட கூடங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.