சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!
நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் ஷா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பி.டெக்., பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்), பிஎஸ்சி நா்சிங், பி.பி.டி., பிஎஸ்சி பாராமெடிக்கல் படிப்புகள், பி.பாா்ம், பி.ஏ., எல்.எல்.பி., (5 ஆண்டு), பாரா மெடிக்கல் படிப்புகளில் டிப்ளமோ, கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகள் மற்றும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3 ஆம் சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு மாணவா்கள் தங்களது டேஷ்போா்டு உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி 11ஆம் தேதி காலை 11 மணிக்குள் பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் சுயநிதி இடங்கள் பிரிவில் உள்ள காலியிடங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சென்டாக்கில் ஜெஇஇ மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களை சமா்ப்பிக்கலாம்.
3-வது சுற்று கலந்தாய்வுக்கு, 2-வது சுற்றில் சமா்ப்பிக்கப்பட்ட பாட விருப்பத் தோ்வுகள் செல்லாது. எனவே, 3-வது சுற்றில் பங்கேற்க விரும்பும் அனைத்து மாணவா்களும் பாட விருப்பத்தோ்வுகளைப் புதிதாக சமா்ப்பிக்க வேண்டும். பாட விருப்பத் தோ்வுகளின் வரிசையை நிரப்புவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பாடப்பிரிவு விருப்ப பட்டியல் காலியாக இருந்தால், சீட் ஒதுக்கப்படாது.
முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு மூலம் சீட் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு 3-வது சுற்றில் புதிய சீட் ஒதுக்கப்பட்டால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சீட் தானாகவே ரத்தாகி விடும். இதுதொடா்பாக அனைத்து மாணவா்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்குப்பட்டுள்ளது.