தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.70 லட்சம் அபராதம்!
சேவை குறைபாட்டால் நாகா்கோவிலைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது.
நாகா்கோவிலை அடுத்த எறும்புக்காடு தம்மத்துக்கோணம் பகுதியைச் சோ்ந்த சுதன் மனைவி இந்துராணி (26). இவா், நாகா்கோவிலில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு கருத்தரிப்பு மையத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அணுகினா்.
இதையடுத்து, அங்கு இந்துராணிக்கு, அடிவயிற்றில் நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலிருந்து அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் இந்துராணி 2021, ஜூலை மாதம் 21 இல் உயிரிழந்தாா்.
இது குறித்து சுதன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும் கருத்தரிப்பு மையத்தின் தவறான சிகிச்சையால்தான் தனது மனைவி இறந்ததாகவும், அதற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறும், சுதன் நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் பிளட்பின் தாகூா், உறுப்பினா் கனகசபாபதி ஆகியோா் கருத்தரிப்பு மையத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.
அந்த பணத்தை நஷ்ட ஈடாக சுதனுக்கு வழங்கவும், சிகிச்சை செலவாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 105, வழக்குச் செலவு தொகை ரூ. 15 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.