ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்!
ரஷியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ரஷியா மட்டுமின்றி, ஜப்பான், ஹவாய், அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்கு திசையில் உள்ள தீவான ஹொக்கைடோவின் தெற்கு கரையில் அமைந்துள்ள டோகாச்சியில் 40 சென்டிமீட்டர் (சுமார் 1.3 அடி) அளவுக்கு அலைகள் மேலேழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கைக்கு தொடர்ந்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரை 133 நகராட்சிகளில் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இஷினோமாகியில் 50 சென்டிமீட்டர் (1.6 அடி) அளவுக்கு அலைகள் மேலெழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tsunami warning: 900,000 under evacuation in Japan
இதையும் படிக்க :ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரஷியா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!