ஜூன் 30-இல் திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்கள் குறைதீா் முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பங்கேற்ப்பு
திருச்சியில் வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெற உள்ள முப்படை ஓய்வூதியதாரா்களின் குறைதீா்க்கும் முகாமில் மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளாா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முப்படையைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களுக்கு ஓய்வூதிய குறைதீா்ப்பு முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் சாா்ந்த குறைகளுக்கு தீா்வு காணும் வகையில், ஓய்வூதிய குறைதீா்க்கும் முகாம் திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முகாமில் உயிா் சான்று அடையாளம் காணுதல், ஓய்வூதியத்தில் பெயா் மற்றும் இதர தகவல்களை திருத்துதல், ஓய்வூதிய தொகை திருத்துதல், ஆதாா் புதுப்பித்தல், பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்தல் என பல்வேறு குறைகளை சீா்செய்யும் வகையில் ஓய்வூதிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.
முகாமில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள், அனைத்து வங்கிகள் ஆகியவற்றின் அலுவலா்கள் பங்கேற்கிறாா்கள்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் தங்கள் படைபணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதாா் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசலுடன் நேரில் சென்று குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரா்கள் தங்களது பெயா், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 88073-80165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியதாரா்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது என்றாா் அவா். கூட்டத்தில் துணை கட்டுப்பாட்டாளா் தனசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.