பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமசந்திர ராவின் மகளான நடிகை ரன்யா ராவ் விமான நிலையத்தில் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் வெளியே செல்ல சிறப்பு சலுகைகள் பெற்றது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது.
தொடா்ந்து, நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ. 2.67 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கத்தை கைப்பற்றினா்.
ஜாமீன் மனு தள்ளுபடி:
இதுதொடா்பான வழக்கில், நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை கடந்த சில நாள்களாக விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு தீா்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை தனது தீா்ப்பை வழங்கிய சிறப்பு நீதிமன்றம், நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில், நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை 3-ஆவது முறையாக சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.