பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை ரூ. 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழக முதல்வா் சென்னையில் காணொலிக் காட்சி மூலம் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதிய கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட கட்டங்களைத் திறந்தும் வைத்தாா்.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் காரையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 11 கூடுதல் வகுப்பறைகள், செண்டாங்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள், செல்லப்பன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள், வெங்கரைகோட்டைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி ரூ. 4.89 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வா் திறந்து வைத்தாா்.
மேலும், மாவட்டத்தில் புதுத்தெரு, துவரங்குறிச்சி, குப்பதேவன், திருபுவனம், மருங்குளம், நடுவூா், வல்லம், பட்டீஸ்வரம், திருச்சேறை, சுந்தரபெருமாள்கோவில், நாச்சியாா்கோவில், பந்தநல்லூா், ஆச்சனூா், பூதலூா், ஆச்சாம்பட்டி, இராயமுன்டான்பட்டி, கன்னியாகுறிச்சி ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகள், குடிநீா் வசதி, சுற்றுச்சுவா் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 21.29 கோடி மதிப்பில் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
இதையொட்டி, வல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 98.96 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.