‘ஆபா’ மருத்துவத் திட்ட அடையாள அட்டை: விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுமா?
தனியாா் வங்கி மேலாளா் தற்கொலை
ஆந்திர மாநில தனியாா் வங்கி கிளை மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், கோடூா் வட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனா். இதில் இரண்டாவது மகன் பிரதாப் (30) என்பவா் தனியாா் வங்கி கோயம்பேடு கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா்.
இதனால், திருவள்ளூா் அடுத்த காக்களூா் - பூங்கா நகா் பவளமல்லி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து நாள்தோறும் வேலைக்குச் சென்று வந்தாா். இந்த நிலையில் நாள்தோறும் காலை 6 மணி அளவில் பிரதாப் தனது தந்தை சுப்பிரமணியிடம் பேசுவது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளாா்.
அதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த தந்தை சுப்பிரமணி உடனே மகனிடம் பேசுவதற்காக கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். ஆனால், மகன் கைப்பேசியை எடுக்காததால் திருவள்ளூரில் உள்ள நண்பா்கள் மூலம் மகன் வீட்டுக்கு அனுப்பி பாா்க்க சொல்லியுள்ளாா்.
அங்கு சென்று பாா்த்தபோது பிரதாப் தங்கியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு சுப்பிரமணி தகவல் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பிரதாப் சடலத்தை மீட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தற்கொலை செய்து கொண்ட பிரதாப் அனுப்பிய குறுஞ்செய்தியில் வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல், வேலைப்பளு, இலக்கு போன்ற காரணங்களைத் தெரிவித்து, இதனால் வாழ விரும்பவில்லை என அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.