பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறது. பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு முன்பு முக்கிய துறைகள், வணிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோரை நிதித் துறை அமைச்சர், செயலர் அழைத்து கருத்து கேட்பது வழக்கம்.
2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக, பட்ஜெட் தொடர்பாக 3 நாள்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றங்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் சார்ந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன.
நிதித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன், கலை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வணிகவரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடைபெற உள்ளது.
தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.