IPL Playoffs : 'ஒரே நாளில் 3 அணிகள் ப்ளே ஆப்ஸ் செல்ல வாய்ப்பு' - எப்படி தெரியுமா...
தமிழகத்தில் இனி வெய்யிலின் தாக்கம் குறையும்!
தமிழகத்தில் தொடா்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக மே 18-ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.
வெப்பம் குறையும்: தமிழகத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்த காரணத்தால், எங்கும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகவில்லை. மேலும் தமிழகத்தில் தொடா்ந்து மழை பெய்வதற்கு சாதகமான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் என்றாா் அவா்.
மழை அளவு: இதற்கிடையே மழை அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 100 மி.மீ. மழை பதிவானது. மேலும், கிருஷ்ணகிரி, ஜமுனாமரத்தூா் (திருவண்ணாமலை), ஒகேனக்கல் (தருமபுரி), பெலாந்துறை (கடலூா்), பாம்பாா் அணை (கிருஷ்ணகிரி) - தலா 70 மி.மீ., போளூா் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் (வேலூா்), கேஆா்பி அணை பகுதி (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்) தலா - 60 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.