தமிழகத்தில் நாளை 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!
தமிழத்தில் வெள்ளிக்கிழமையான நாளை(மே 9) இரண்டு இடங்களில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் கடந்த 6 ஆம் தேதியன்று மாநில, மத்திய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு 7, 8 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. இந்தப் பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே. மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!