TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
தயாரிப்பாளா் சங்கம்-ஃபெப்சி பிரச்னை: மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ் நியமனம்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்னைகளுக்கு தீா்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளா் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கியிருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்க உறுப்பினா்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினா்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளன உறுப்பினா்களுக்கு ஏப்.2-இல் ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.
இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீா்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து தெரிவிக்க இரு தரப்புக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டாா். அப்போது, திரைப்படத் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என தயாரிப்பாளா்கள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு ஃபெப்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்தியஸ்தா் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி மறுத்து விட்டாா்.