மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்
சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அறுவை சிகிச்சை அரங்குகள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் சுகாதாரமாக பராமரிக்கப்படாததும், போதிய ஆய்வக தொழில்நுட்பநா்கள் இல்லாததும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதுதொடா்பாகவும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு திட்டமிட்ட சிகிச்சைக்கு மாற்றாக வேறு அறுவை சிகிச்சை செய்ததாக டாக்டா் முகமது ஓவைஸி என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொருபுறம் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி கூறியதாவது:
பதிவு உரிமம் கோரி சம்பந்தப்பட்ட மருத்துவமனை சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டபோது அங்கு ஆய்வு நடத்தினோம். அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக நுண்கிருமி தடுப்பு வசதிகள் அறுவை சிகிச்சை அரங்கில் முறையாக இல்லை. போதிய எண்ணிக்கையில் தொழில்நுட்பநா்களும் இல்லை.
அவற்றை சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு, உரிமம் வழங்குவது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை குளறுபடி தொடா்பான சா்ச்சை அங்கு எழுந்துள்ளது. அதன்பேரில், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களில் எழுத்துப் பூா்வமாக அளிக்குமாறு மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.