தவெக கொடியில் யானை சின்னம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்
சென்னை: தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
யானை சின்னம் குறித்து விளக்கமளிக்குமாறு தவெக கட்சிக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தவெக கொடி குறித்த வழக்கில் நாளை (ஜூலை 3) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலரான பெரியாா் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியான தங்கள் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகா் விஜயின் தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.சந்திரசேகரன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, தவெக சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக ஏற்கெனவே தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதைப் பாா்த்தாலே தெரியும். விளம்பர நோக்கத்துக்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு மீது ஜூலை 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. ஓலா, ஊபர், ரேபிடோ பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
35 minutes ago