``தாயுள்ளத்துடன் பணியாற்றும் செவிலியர்களுக்கும் சமர்ப்பணம்'' - நைட்டிங்கேல் விருது பெற்ற செவிலியர்
விருதுநகர் மாவட்டம், சேத்துார் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த கருப்பையா, பிலோமினா தம்பதியின் மகள் அலமேலு மங்கை 40.
செவிலியர் அலமேலு மங்கையின் கணவர் சடையாண்டி, மின் வாரிய உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பத்மஜா, மகா ஸ்ரீனிகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
செவிலியர் அலமேலு, கடந்த 2008-ல் திருவண்ணாமலை மாவட்டம், அடவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் விருதுகர் மாவட்டம், குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணிபுரிந்தார்.

கடந்த 2013-ல் இருந்து தற்போதுவரை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிபுரிந்த அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ உதவி தேவையுள்ள அனைத்து மக்களுக்கும் நேரம் காலம் பார்க்காமல் மருத்துவ சேவை செய்துள்ளார்.
இவரின் இச்சேசைவைக்காக மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் “தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங் கேல் விருது”-க்கு தேர்வு பெற்றுள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து தேர்வாகி, கடந்த 2-ம் தேதி, டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதினைப் பெற்றுள்ளார் அலமேலு மங்கை.
இது குறித்துப் பேசிய செவிலியர் அலமேலு மங்கை, “இந்த விருதைப் பெற்றது பெரும் மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது. முன்பை விட மேலும் சிறப்பாகப் பணியாற்றும் எண்ணத்தை அதிகரிக்கச் செய்திருகிக்கிறது.

மருத்துவ சேவை தேவையுள்ள மக்களுக்கு தொடர்ந்து பணிபுரியும் நம்பிக்கையையும் தருகிறது. தாயுள்ளத்துடன் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பணியை சிறப்பாக செய்யும் போது, ஒவ்வொருவரும் இது போன்ற விருதுகளைப் பெற முடியும்” என்றார்.