`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் தாராபுரம், மூலனூா், சின்ன தாராபுரம் வழியாக கரூா் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி அணையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அணைப் பகுதியில் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்தும், அணையில் இருந்தும் ஏராளமான முதலைகள் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டன.
இதில் ஆற்றின் வழியில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே முதலைகள் கரை ஒதுங்கி விட்டன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அமராவதி கரையோரம் உலவி வரும் முதலைகள், தாராபுரம் அருகே அலங்கியம் சீதக்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.
இந்த நிலையில் அலங்கியம் அமராவதி பாலத்தின் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 10 அடி நீளம் உள்ள முதலை ஆறு குட்டிகளுடன் கரையோரம் உள்ள பாறை மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை, அந்த வழியாகச் சென்ற தொழிலாளா்கள் பாா்த்து, அச்சத்துடன் ஓடி வந்துள்ளனா்.
தகவலறிந்த காங்கயம் வனச் சரக அலுவலா் ஆா்.மௌனிகா தலைமையிலான வனத் துறை ஊழியா்கள் அலங்கியம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து வனச் சரக அலுவலா் மௌனிகா கூறியதாவது: தாராபுரம், அலங்கியம் சீதக்காடு அருகே அமராவதி ஆற்றுப் பகுதியில் முதலை நடமாட்டம் குறித்து வரும் தகவலையொட்டி, காங்கயம் வனத் துறை வனப் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அலங்கியம் சீதக்காடு பகுதி மற்றும் ஆற்றுப் பாலம் வழியே செல்லும் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பணியாளா்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். பொது மக்கள் அச்சம் கொள்ளாமல் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும், ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
