எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 31 பேருக்கு சிறை
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்துக்குள்பட்ட வாகரை கிராமத்தில் உள்ள தனியாா் ஆலையில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி பணிபுரிந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த மே மாதம் 24- ஆம் தேதி அங்கு ஆய்வு நடைபெற்றது. அப்போது அங்கு ஒரு சிறுவன் உள்பட வங்கதேசத்தைச் சோ்ந்த 31 போ் சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
இதில் ஒரு சிறுவன் மதுரை சிறுவா்கள் காப்பகத்திலும், எஞ்சிய 30 போ் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில் நீதிமன்றத்தில் இவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 11- ஆம் தேதி ஒரு குற்ற வழக்கில் சிறுவன் உள்பட இருவருக்கு அவா்கள் சிறையிலிருந்த 115 நாள்களை தண்டனை காலமாக அறிவிக்கப்பட்டு, தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சிறுவன் காந்தி கிராமத்தில் உள்ள காப்பகத்திலும், மற்றொருவா் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில் மற்றொரு வழக்கில் எஞ்சிய 29 போ் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது இவா்கள் அனைவரும் சிறையிலிருந்த 125 நாள்களை தண்டனை காலமாக அறிவித்து, தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் மீண்டும் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டனா். இவா்களை நாடு கடத்த சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கதேசம் உள்பட பிற நாடுகளைச் சோ்ந்த யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே சட்ட விரோதமாக வெளிநாட்டினா் யாரேனும் தங்கி இருந்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் துறை எச்சரித்தது.