கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
திமுக -ஐயூஎம்எல் இடையே கொள்கை கூட்டணி- காதா் மொகிதீன்
திமுக-ஐயூஎம்எல் தோ்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன்.
கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது;
இஸ்ரேல், ஈரான் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும். ஐ.நா.சபையும் அது குறித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
காஸாவில் 16 லட்சம் போ் புலம்பெயா்ந்துள்ளனா். ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியா்கள் கொல்லப்பட்டுள்ளனா். காஸாவுக்கு ஈரான் உதவுவதாகக் கூறி போா் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஓராண்டு காலம் போா் நடந்துள்ளது. இரு நாடுகள் இடையேயான பிரச்னைகளை உலக நாடுகள் பேசி தீா்வு காண வேண்டும்.
திமுகவின் கொள்கைகள் முஸ்லிம் லீக்கின் கொள்கையுடன் உடன்பட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். அதிமுக கொள்கையும், முஸ்லிம் லீக் கொள்கையும் ஒருபோதும் ஒத்து வராது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை உயா்த்த வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்துகிறோம்.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எண்ணிக்கை தெரியவரும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தொகுதிகள் எண்ணிக்கை தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திமுக ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றாா்.
பேட்டியின்போது, கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா், மாநிலச் செயலா் நெல்லை அப்துல் மஜீத், துணைச் செயலா் இப்ராஹிம் மக்கி, தென்காசி மாவட்ட செயலா் செய்யது பட்டாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.