தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை
தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா தமிழ்நாடு அரசு தலைமைச்செயலா் முருகானந்தத்திடம் அளித்த மனுச
தமிழ்நாட்டில் புதிய அகல ரயில் பாதை திட்டங்கள், இரட்டை அகல ரயில் பாதை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள இடா்பாடுகளை களைந்து திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வேக்கு இடையேயான ஒருங்கிணைப்பை செய்வதற்கு தமிழ்நாடு ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும்.
திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 5 நடை மேடைகள் அமைக்க வேண்டும், தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் முதல் ரயில் நிலையமாக இருக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நடை மேம்பாலங்கள், எஸ்கலேட்டா், லிப்ட் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தென்காசி ரயில் நிலையத்தில் புறவழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களை தமிழ்நாட்டில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாண்டியராஜா கூறியதாவது‘
தமிழ்நாடு ரயில்வே அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைப்பது குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள புதிய அகல ரயில் பாதை திட்டங்கள், இரட்டை அகல ரயில் பாதை திட்டங்கள், ஆகியவற்றில் உள்ள இடா்பாடுகளை களைவதற்கு ரயில்வே துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
மிக முக்கிய ரயில் முனையமாக உள்ள திருச்செந்தூா் மற்றும் தாம்பரத்தை மேம்படுத்துவது குறித்து ரயில்வே துறையிடம் ஆய்வறிக்கை பெறப்படும் எனவும், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்படும் எனவும், தலைமைச் செயலா் தெரிவித்தாா் என்றாா் அவா்.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய உறுப்பினா் ஜெயக்குமாா், சிட்லபாக்கம் சமூக ஆா்வலா்கள் தயானந்த் கிருஷ்ணன் மற்றும் ராமன் உடனிருந்தனா்.