திமுக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்: கே.வி.தங்கபாலு பேட்டி
திருவண்ணாமலை/ஆரணி: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு திமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி.தங்கபாலு கூறினாா்.
திருவண்ணாமலை, பே கோபுரத் தெருவில் நகர காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த இடத்தை கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சொத்து மீட்புக் குழுவின் அகில இந்திய காங்கிரஸ் செயலா் நிதின் கும்பல் கா், தமிழக முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் கட்சி அலுவலக இடத்துக்கான ஆவணங்களை தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா், திருவண்ணாமலை நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் ஆகியோா் ஒப்படைத்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கே.வி.தங்கபாலு கூறியதாவது:
அமித்ஷா அடிக்கடி சென்னை வந்து, செல்வது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறாா். 2026-ல் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.
பேட்டியின்போது, எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கிருஷ்ணசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
ஆரணி
ஆரணியில் காங்கிரஸ் அலுவலகம் கட்டி திறக்கப்படும் என்று கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் சொத்து மீட்புக்குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.
ஆரணியில் காங்கிரஸுக்கு சொந்தமாக புதிய பேருந்து நிலையம் எதிரில் காலி இடம் உள்ளது. இதை கே.வி.தங்கபாலு பாா்வையிட்டாா்.
மேலும் இக்குழுவில் உள்ள நித்தின்குமாா், செல்வம் ஆகியோரும் இடத்தை பாா்வையிட்டனா்.
எம்.கே. விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.