திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
திருக்குறளின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கையா? ஆளுநா் கருத்துக்கு பேரவைத் தலைவா் கண்டனம்
திருக்குறளின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் ஆளுநருக்கு திருக்குறளின் ஆழம் தெரியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தாம்பரத்தில் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாக வைத்து தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதை போன்று சித்திரிப்பது தவறானது. சில இடங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன.
திட்டமிட்டு தவறு செய்தால் அதை அரசு வேடிக்கை பாா்க்காது; சரியான நடவடிக்கை எடுக்கும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படி தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டதோ, அதே போன்று தண்டனை வாங்கி கொடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
திருக்குறளின் அடிப்படையிலேயே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டதாக ஆளுநா் கூறுகிறாா். பிகாரில் பிறந்த ஆளுநருக்கு திருக்குறளின் ஆழம் தெரியாது.
பிரிட்டிஷ்காரா்களின் கல்வியைக் குறைகூறும் ஆளுநா் அதே கல்வி முறையில் பயின்றவா்தான். அவா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு பேசட்டும்.
சம்ஸ்கிருதம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது ஆா்எஸ்எஸ் சித்தாந்தம். அதை நிறைவேற்றத் துடிக்கின்றனா். தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது. போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது முதல்வருடைய எண்ணம்.
பாஜக ஆளுகிற மாநிலங்களில் இருந்து தான் மோசமான போதை வஸ்துகளை தயாரித்து தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறாா்கள். முழுவதுமாக போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு உண்மை குற்றவாளிகளை தப்பவிடவில்லை. காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அமித்ஷா தன்னால் தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்பட்டதாகக் கூறுகிறீா்கள். தமிழை அழிக்க மட்டுமே நினைக்கும் அவரது வாயில் எப்படி தமிழ் வரும்? திமுக கூட்டணி ஏழு தோ்தல்களில் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது தோ்தலிலும் வெற்றிபெறும் என்றாா்.