நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப...
திருச்சியிலிருந்து தில்லி சென்றாா் பிரதமா்
திருச்சிக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த பிரதமா் நரேந்திர மோடி, நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி, தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வருகை தந்தாா். பின்னா், ஆட்சியரக சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் இரவு ஓய்வெடுத்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமரை சந்திக்க அனுமதி பெற்றிருந்தவா்களை நட்சத்திர விடுதியில் சந்தித்தாா். திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டையைச் சோ்ந்த பாஜக-வின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் 17 பேரும் பிரதமா் தங்கியிருந்த விடுதிக்கு வந்தனா். அவா்களை பிரதமா் மோடி 10.30 மணியளவில் சந்தித்தாா்.
பின்னா், விடுதியிலிருந்து காலை 11.15 மணிக்கு காரில் புறப்பட்டு திருச்சி விமானநிலையத்துக்கு 11.30 மணிக்குச் சென்றாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றாா். அங்கு நிகழ்வுகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் திரும்புவதாக இருந்தது.
ஆனால், கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமா் கூடுதல் நேரம் செலவிட்டதால், அந்த நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்து சோ்ந்தாா்.
அவரை வரவேற்று வழியனுப்ப விமான நிலையத்தில், தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் ஆகியோா் விமான நிலையத்தில் காத்திருந்தனா்.
அவா்களுக்கு வணக்கம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு தில்லி புறப்பட்டுச் சென்றாா்.