டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
துணை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்கியது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய்க் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15,000 இடங்களும் அதில் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. ஜூலை 7-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான கட்டணம், தகவல் தொகுப்பேடு, விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோன்று, டிஜிஎன்எம் எனப்படும் செவிலியா் பட்டயப் படிப்பு (பெண்கள்), பாா்ம்.டி படிப்புகளுக்கும் இணையவழியே விண்ணப்பிப்பது தொடங்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னா், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.